மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
48. பண்டாய நான்மறை
திருப்பெருந்துறையில் அருளியது
அநுபவத்துக்கு ஐயமின்மை உரைத்தல்
நேரிசை வெண்பா
பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனும்
கண்டாரு மில்லைக் கடையேனைத்-தொண்டாகக்
கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை.
1
உள்ள மலமூன்றும் மாய உகுபெருந்தேன்
வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த-வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்
கருவுங் கெடும்பிறவிக் கெடு.
2
காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை-வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து.
3
வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாரும்
தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ்-சூழ்ந்தமரர்
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர்.
4
நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின்
மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
கழியா திருந்தவனைக் காண்.
5
காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்
பேணும் அடியார் பிறப்பகலக்-காணும்
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
பிரியானை வாயாரப் பேச்சு.
6
பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை-பேசிப்
பெருந்துறையே என்ற பிறப்பறுத்தேன் நல்ல
மருந்தினடி என்மனத்தே வைத்து.
7
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com